Connect with us

செய்திகள்

ஜெயலலிதா இல்லம் அன்புடன் வரவேற்கிறது! சசிகலா அழைப்பு!

Published

on

மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும், என சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வேதனை.

தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லாமல், ஏற்கனவே ஐந்து வருடங்களை வீணாக்கிய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், இனி வரும்காலங்களிலும் தமிழக மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் ஏற்படாது என்பது இப்போதே தெரிந்துவிட்டது. திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றியாகத்தான் இதை கருதமுடிகிறது. மேலும், “ஊரு ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற கதையாக எங்கள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு திமுக அதில் குளிர் காய்ந்து பெற்ற வெற்றியாகத்தான் இதை பார்க்கமுடிகிறது. பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் ஆரம்பித்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அதன் பின்னர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் அதன் வளர்ச்சியில் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருப்பதால் இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன்.

கட்சியை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து, இன்றைக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சில இடங்களில் நான்காவது இடத்திற்கும். மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும், இதுவரை இயக்கம் என்றைக்கும் கண்டிராத வகையில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்து இருப்பது மிகப்பெரிய வேதனை. இதற்காகவா இருபெரும் தலைவர்களும் இந்த இயக்கத்தின் முன்னேற்றத்திற்காக தங்கள் இறுதிமூச்சு உள்ள வரை அயராது பாடுபட்டார்கள்?. இது அவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். இதனை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. இந்த அவல நிலை எதனால் ஏற்பட்டது? இதற்கு யார் காரணம்? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்கு மாபெரும் வெற்றி பெற்று இருக்கும் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்து இருக்கும்.

இதுபோன்ற தொடர் தோல்விகளை இயக்கம் எந்த நேரத்திலும் கண்டதில்லை. தனி ஆவர்த்தனம் செய்து கொண்டு இருந்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. யாராக இருந்தாலும் சுயமாக சிந்தித்து அதில் வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அடுத்தவர்கள் சொல்வதையாவது கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும். அனைத்தையும் இழந்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. இதுபோன்று புரட்சித்தலைவர் அவர்கள் ஆராம்பித்து, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்தெடுத்த இயக்கம் தொடர்ந்து தோல்வி அடைய வேண்டுமா? அல்லது வெற்றியை ஈட்ட வேண்டுமா? என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து கட்சியை ஒருங்கிணைக்க அனைவரும் வர வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் “இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்ததை அனைவரும் மனதில் வைத்து ஒன்றுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் திமுக தலைமையிலான மூன்றாண்டு கால ஆட்சியில் கடுமையாக பாதிப்படைந்து இருக்கிறார்கள். திமுகவினர் நாள்தோறும் தமிழக மக்களை கசக்கி பிழிந்து அவர்களுக்கு மிகப்பெரிய கொடுமையை அளித்து வருகின்றனர். எனவே. மக்களிடம் நன்மதிப்பை பெற்று வெற்றி பெறுவது என்பது நடக்காத ஒன்று என்பதை நன்றாக அறிந்த திமுகவினர், எதிர்கட்சியினரை பிளவுபடுத்தி அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு இந்த இயக்கத்தை ஒன்றிணையாமல் பார்த்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இயக்கத்தில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் கட்சி நலனை புறம்தள்ளிவிட்டு சுயநலப்போக்கோடு செயல்பட்டு இயக்கத்தை தொடர்ந்து தோல்வி அடைய வைப்பதால், கோடான கோடி தொண்டர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. மேலும், இதன் காரணமாக தமிழக மக்களும் திமுகவினரிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிறார்கள். எனவே. திமுகவினரின் கோரப்பிடியிலிருந்து தமிழக மக்களை காத்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த இயக்கத்தை தொடங்கினார். இதனை மனதில் வைத்துதான் இந்த இயக்கத்தில் பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும் என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்களும் இந்த இயக்கம் ஒன்றுபடவேண்டும் என்று தான் விரும்புகிறார்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் ஏழை எளிய சாமானிய மக்கள் நிம்மதியாக வாழ முடியும். இனியும் நான் பொறுமையாக இருந்தால் அது நம் புரட்சித்தலைவருக்கும். புரட்சித்தலைவிக்கும், இந்த இயக்கத்தை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கும் கோடான கோடி தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்யும் மிக பெரிய துரோகமாகிவிடும். எனவே, இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் கழக நிர்வாகிகள் அனைவரும் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து, தமிழக மக்களையும், இந்த இயக்கத்தின் உன்னத தொண்டர்களின் உணர்வையும், உயர்வையும் எண்ணி அனைவரும் வாருங்கள். உங்கள் அனைவரையும் எந்தவித வேறுபாடும் இல்லாமல் அரவணைத்து அம்மா அவர்கள் கட்டிக்காத்த அதே கொள்கைகளை நிலை நிறுத்தி, ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு புரட்சித்தலைவரின் பொன்மொழிக்கேற்ப, புரட்சித்தலைவியின் வழி வந்த ஓர் தாய் வயிற்று பிள்ளைகளாக, ஓர் அணியில் நின்று. ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். என்னுடைய குறிக்கோள் கழகத்தினரும் தமிழக மக்களும்தான் எனது குடும்பம். புரட்சித்தலைவி அம்மா அவர்களை போலவே எனக்கென்று தனிப்பட்ட குடும்பம் கிடையாது. எனக்கென்று தனியாக எந்தவித சுய விருப்பு, வெறுப்புகளும் இருந்தது கிடையாது. எனது உடன்பிறவா சகோதரியாக தோழியாக அரசியலில் ஆசானாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் கட்சியின் நலனுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காக மட்டும் தான் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் எதிரிகளின் சூழ்ச்சியால் எங்கள் மீது பொய்யாக போடப்பட்ட வழக்கின் தீர்ப்பால் கடந்த 2017-ஆம் ஆண்டு சிறை செல்ல வேண்டிய நெருக்கடியான நேரத்திலும் எனது ஒரே சிந்தனை எப்படியாவது அம்மாவின் ஆட்சியை காப்பாற்றி விடவேண்டும், அதேபோன்று கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான். இதற்காக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றிவிட்டுதான் சென்றேன். ஆனால், என்ன நடந்தது?. தமிழகத்தில் கழக ஆட்சி மீண்டும் வரமுடியவில்லை. கட்சியும் காப்பாற்றப்படவில்லை. புரட்சித்தலைவர் அவர்களோடு பயணித்த காலங்களில் அவர் இந்த கட்சி ஏழைகளுக்கான கட்சி என்றும், அதனால் கட்சிதான் முக்கியம். தொண்டர்கள்தான் முக்கியம் என்பதை எப்போதும் என்னிடம் சொல்லியிருக்கிறார். எனவே, எனக்கு இந்த கட்சியை நம்பிக்கொண்டிருக்கும் கோடான கோடி தொண்டர்களும், தமிழக மக்களும்தான் முக்கியம். இதை நன்றாக உணர்ந்து இந்த கட்சி அழிந்துவிடக்கூடாது. தமிழக மக்கள் முன்னேற வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் வாருங்கள். ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே நமது இலக்கு வரும் 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கான பணிகளை உடனே ஆராம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். உங்கள் அனைவரையும் ரயும் “ஜெயலலிதா இல்லம்” அன்புடன் வரவேற்கிறது என்பதை இந்நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உடன் பிறப்புக்களே ஒன்றிணைவோம் வாருங்கள். நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் உயிர் தொண்டர்களின் உயர்வுக்காகவும், தமிழக மக்களின் வாழ்வுக்காகவும், ஒன்றிணைவோம் வாருங்கள். கழக தொண்டர்களே யாரும் கலங்க வேண்டாம். நாம் ஒற்றுமையுடன் இருந்தால் யாராலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. இனி வரும் காலம் நமக்கானது. நம் இருபெரும் தலைவர்களின் எண்ணத்தை ஈடேற்றிடும் வகையில் வெற்றியை பெறப் போகிறோம் என்பதை மனதில் வைத்து, தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால் நாளை நமதே” என கூறியுள்ளார்.

 

 

 

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்திகள்

நிர்மலா மகளிர் கல்லூரியில் திருக்குறள்களை பரதநாட்டியமாக அரங்கேற்றி சாதனை!

Published

on

நிர்மலா மகளிர் கல்லூரியில் 1,330 திருக்குறள்கள் – பரதநாட்டிய நிகழ்ச்சியில் புதிய சாதனை கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரி இன்று 4 மணி 30 நிமிடங்களில் 1,330 திருக்குறள்களை பரதநாட்டியமாக அரங்கேற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் 133 மாணவிகள் பங்கேற்று, ஒவ்வொரு மாணவியும் 10 திருக்குறள்களை பாரம்பரிய நடனத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

இந்த தனித்துவமான பண்பாட்டு சாதனை, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பால் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, தமிழ் பண்பாடு மற்றும் நுண்கலைகளில் கல்லூரியின் அர்ப்பணிப்பிற்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சி, மாணவிகளின் திறமை, ஒழுக்கம் மற்றும் கலாச்சார மேன்மையை வெளிப்படுத்தும் பெருமைமிக்க தருணமாக அமைந்தது.

Continue Reading

செய்திகள்

கோவையில் ரியம் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வளாகம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா திறந்து வைத்தார்.

Published

on

கோவை மாநகரின் சாய்பாபா காலனியில் முன்னணி விளையாட்டு அகாடமியாக இயங்கி வரும் ரியம் ஸ்போர்ட்ஸ், தனது புதிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகத்தைத் துடியலூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) தொடங்கியது.முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா இந்த மையத்தைத் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் ரியம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுவாதி அகர்வால், இணை நிறுவனர் த்ரேதம் அகர்வால் மற்றும் எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.துடியலூரில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், ‘பிக்கிள்பால்’ விளையாட்டுக்கான தமிழகத்தின் மிகப்பெரிய விளையாட்டுத் தளங்களில் ஒன்று அமெரிக்க ஓபன் போட்டி தரத்திலான தளமாக அமைக்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் பயிற்சிக்காக ஆஸ்ட்ரோ டர்ஃப் மற்றும் கான்கிரீட் பிட்ச்கள், துல்லியமான பந்துவீச்சு இயந்திரத்துடன் (Stitch ball machine) வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், விரைவில் ஃபிபா (FIFA) அங்கீகாரம் பெற்ற கால்பந்து மைதானம், ஃபிபா (FIBA) தரத்திலான கூடைப்பந்து தளம் மற்றும் நவீன கிரிக்கெட் பயிற்சி வசதிகள் இங்கு வரவுள்ளன.இந்த மையம் ஒரு விளையாட்டுப் பயிற்சி அகாடமியாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டுகளின் மேல் ஆர்வமுள்ள மக்கள் இந்த தளங்களை வாடகைக்கு எடுத்து விளையாடும் வசதியையும் வழங்குகிறது.அதே நேரம் தேசிய அளவிலான சாம்பியன்களைக் கொண்ட பயிற்சியாளர் குழு மூலம் இங்கு உயர்தரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த வளாகத்தின் திறப்பு விழாவில் பேசிய ஆ.இராசா எம்.பி., கோயம்புத்தூரின் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த ரியம் ஸ்போர்ட்ஸ் எடுத்துள்ள இந்த முயற்சியைப் பாராட்டினார். இத்தகைய உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இப்பகுதி விளையாட்டு வீரர்களுக்குப் பெரிதும் உதவும் என்றும், இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் விரிவடையத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.ரியம் ஸ்போர்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் சுவாதி அகர்வால் பேசுகையில், “இது வெறும் விளையாட்டு மையம் மட்டுமல்ல, விளையாட்டுத் துறையில் ஒரு புரட்சியாக அமையும்” என்றார்.

தற்போது பிக்கிள்பால் மைதானம் பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளது. காலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 மற்றும் இரவு நேரங்களில் ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 பேர் கொண்ட குழு விளையாடலாம். 200 கார்கள் நிறுத்தும் வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு எனப் பாதுகாப்பு வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் இணை நிறுவனர் த்ரேதம் அகர்வால் கூறுகையில், இரண்டாம் கட்டப் பணிகளாகக் கூடைப்பந்து, கால்பந்து மைதானங்கள் மற்றும் செஸ், ஸ்னூக்கர், ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டு வசதிகள் பிப்ரவரி இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.

Continue Reading

கோயம்பத்தூர்

திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா திருப்பூரில் , பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. சாமுண்டிபுரம் பகுதி, கோல்டன் நகர், நல்லூர் மற்றும் நெருப்பெரிச்சல் பகுதி உள்ளிட்ட திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.

இந்த விழா தமிழக வெற்றிக் கழக திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ். பாலமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் தவெக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.க்கில் நடத்தப்பட்ட இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பாரம்பரிய முறையில் பொங்கல் தயாரித்தல், இனிப்புகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து தரப்பினரும் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடியதன் மூலம் சமூக ஒற்றுமையின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இத்தகைய சமத்துவ விழாக்கள் சமூக நல்லிணக்கத்தையும், மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் வலுப்படுத்தும் என்பதையும் விழாவில் கலந்துகொண்டவர்கள் எடுத்துரைத்தனர்

Continue Reading

Trending