Connect with us

செய்திகள்

ஜெயலலிதா இல்லம் அன்புடன் வரவேற்கிறது! சசிகலா அழைப்பு!

Published

on

மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும், என சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வேதனை.

தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லாமல், ஏற்கனவே ஐந்து வருடங்களை வீணாக்கிய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், இனி வரும்காலங்களிலும் தமிழக மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் ஏற்படாது என்பது இப்போதே தெரிந்துவிட்டது. திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றியாகத்தான் இதை கருதமுடிகிறது. மேலும், “ஊரு ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற கதையாக எங்கள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் பயன்படுத்திக் கொண்டு திமுக அதில் குளிர் காய்ந்து பெற்ற வெற்றியாகத்தான் இதை பார்க்கமுடிகிறது. பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் ஆரம்பித்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அதன் பின்னர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் அதன் வளர்ச்சியில் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருப்பதால் இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன்.

கட்சியை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து, இன்றைக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சில இடங்களில் நான்காவது இடத்திற்கும். மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும், இதுவரை இயக்கம் என்றைக்கும் கண்டிராத வகையில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்து இருப்பது மிகப்பெரிய வேதனை. இதற்காகவா இருபெரும் தலைவர்களும் இந்த இயக்கத்தின் முன்னேற்றத்திற்காக தங்கள் இறுதிமூச்சு உள்ள வரை அயராது பாடுபட்டார்கள்?. இது அவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். இதனை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. இந்த அவல நிலை எதனால் ஏற்பட்டது? இதற்கு யார் காரணம்? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்கு மாபெரும் வெற்றி பெற்று இருக்கும் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்து இருக்கும்.

இதுபோன்ற தொடர் தோல்விகளை இயக்கம் எந்த நேரத்திலும் கண்டதில்லை. தனி ஆவர்த்தனம் செய்து கொண்டு இருந்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. யாராக இருந்தாலும் சுயமாக சிந்தித்து அதில் வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அடுத்தவர்கள் சொல்வதையாவது கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும். அனைத்தையும் இழந்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. இதுபோன்று புரட்சித்தலைவர் அவர்கள் ஆராம்பித்து, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வளர்த்தெடுத்த இயக்கம் தொடர்ந்து தோல்வி அடைய வேண்டுமா? அல்லது வெற்றியை ஈட்ட வேண்டுமா? என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து கட்சியை ஒருங்கிணைக்க அனைவரும் வர வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் “இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்ததை அனைவரும் மனதில் வைத்து ஒன்றுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் திமுக தலைமையிலான மூன்றாண்டு கால ஆட்சியில் கடுமையாக பாதிப்படைந்து இருக்கிறார்கள். திமுகவினர் நாள்தோறும் தமிழக மக்களை கசக்கி பிழிந்து அவர்களுக்கு மிகப்பெரிய கொடுமையை அளித்து வருகின்றனர். எனவே. மக்களிடம் நன்மதிப்பை பெற்று வெற்றி பெறுவது என்பது நடக்காத ஒன்று என்பதை நன்றாக அறிந்த திமுகவினர், எதிர்கட்சியினரை பிளவுபடுத்தி அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு இந்த இயக்கத்தை ஒன்றிணையாமல் பார்த்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இயக்கத்தில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் கட்சி நலனை புறம்தள்ளிவிட்டு சுயநலப்போக்கோடு செயல்பட்டு இயக்கத்தை தொடர்ந்து தோல்வி அடைய வைப்பதால், கோடான கோடி தொண்டர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. மேலும், இதன் காரணமாக தமிழக மக்களும் திமுகவினரிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிறார்கள். எனவே. திமுகவினரின் கோரப்பிடியிலிருந்து தமிழக மக்களை காத்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் புரட்சித்தலைவர் அவர்கள் இந்த இயக்கத்தை தொடங்கினார். இதனை மனதில் வைத்துதான் இந்த இயக்கத்தில் பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும் என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்களும் இந்த இயக்கம் ஒன்றுபடவேண்டும் என்று தான் விரும்புகிறார்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் ஏழை எளிய சாமானிய மக்கள் நிம்மதியாக வாழ முடியும். இனியும் நான் பொறுமையாக இருந்தால் அது நம் புரட்சித்தலைவருக்கும். புரட்சித்தலைவிக்கும், இந்த இயக்கத்தை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கும் கோடான கோடி தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்யும் மிக பெரிய துரோகமாகிவிடும். எனவே, இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் கழக நிர்வாகிகள் அனைவரும் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து, தமிழக மக்களையும், இந்த இயக்கத்தின் உன்னத தொண்டர்களின் உணர்வையும், உயர்வையும் எண்ணி அனைவரும் வாருங்கள். உங்கள் அனைவரையும் எந்தவித வேறுபாடும் இல்லாமல் அரவணைத்து அம்மா அவர்கள் கட்டிக்காத்த அதே கொள்கைகளை நிலை நிறுத்தி, ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு புரட்சித்தலைவரின் பொன்மொழிக்கேற்ப, புரட்சித்தலைவியின் வழி வந்த ஓர் தாய் வயிற்று பிள்ளைகளாக, ஓர் அணியில் நின்று. ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். என்னுடைய குறிக்கோள் கழகத்தினரும் தமிழக மக்களும்தான் எனது குடும்பம். புரட்சித்தலைவி அம்மா அவர்களை போலவே எனக்கென்று தனிப்பட்ட குடும்பம் கிடையாது. எனக்கென்று தனியாக எந்தவித சுய விருப்பு, வெறுப்புகளும் இருந்தது கிடையாது. எனது உடன்பிறவா சகோதரியாக தோழியாக அரசியலில் ஆசானாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் கட்சியின் நலனுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காக மட்டும் தான் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் எதிரிகளின் சூழ்ச்சியால் எங்கள் மீது பொய்யாக போடப்பட்ட வழக்கின் தீர்ப்பால் கடந்த 2017-ஆம் ஆண்டு சிறை செல்ல வேண்டிய நெருக்கடியான நேரத்திலும் எனது ஒரே சிந்தனை எப்படியாவது அம்மாவின் ஆட்சியை காப்பாற்றி விடவேண்டும், அதேபோன்று கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான். இதற்காக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றிவிட்டுதான் சென்றேன். ஆனால், என்ன நடந்தது?. தமிழகத்தில் கழக ஆட்சி மீண்டும் வரமுடியவில்லை. கட்சியும் காப்பாற்றப்படவில்லை. புரட்சித்தலைவர் அவர்களோடு பயணித்த காலங்களில் அவர் இந்த கட்சி ஏழைகளுக்கான கட்சி என்றும், அதனால் கட்சிதான் முக்கியம். தொண்டர்கள்தான் முக்கியம் என்பதை எப்போதும் என்னிடம் சொல்லியிருக்கிறார். எனவே, எனக்கு இந்த கட்சியை நம்பிக்கொண்டிருக்கும் கோடான கோடி தொண்டர்களும், தமிழக மக்களும்தான் முக்கியம். இதை நன்றாக உணர்ந்து இந்த கட்சி அழிந்துவிடக்கூடாது. தமிழக மக்கள் முன்னேற வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் வாருங்கள். ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே நமது இலக்கு வரும் 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கான பணிகளை உடனே ஆராம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். உங்கள் அனைவரையும் ரயும் “ஜெயலலிதா இல்லம்” அன்புடன் வரவேற்கிறது என்பதை இந்நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உடன் பிறப்புக்களே ஒன்றிணைவோம் வாருங்கள். நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் உயிர் தொண்டர்களின் உயர்வுக்காகவும், தமிழக மக்களின் வாழ்வுக்காகவும், ஒன்றிணைவோம் வாருங்கள். கழக தொண்டர்களே யாரும் கலங்க வேண்டாம். நாம் ஒற்றுமையுடன் இருந்தால் யாராலும் நம்மை வீழ்த்திவிட முடியாது. இனி வரும் காலம் நமக்கானது. நம் இருபெரும் தலைவர்களின் எண்ணத்தை ஈடேற்றிடும் வகையில் வெற்றியை பெறப் போகிறோம் என்பதை மனதில் வைத்து, தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால் நாளை நமதே” என கூறியுள்ளார்.

 

 

 

 

 

கோயம்பத்தூர்

இந்தியாவின் முதல் மனித சக்தி நீர்மூழ்கிக் கப்பல்: குமரகுரு மாணவர்கள் சாதனை

Published

on

கோவை குமரகுரு கல்வி நிறுவன மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியா சார்பாக இங்கிலாந்து மற்றும் மொனாக்கோ நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியாவின் கடல்சார் கண்டுபிடிப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதன் முறையாக மாணவர்களால் உருவாக்கப்பட்ட, மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அடுத்த தலைமுறை மின்சார பந்தயப் படகை கோவை குமரகுரு கல்வி நிறுவன மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ஐஎன்எஸ் அக்ரானி (INS Agrani) செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார் மற்றும் பெங்களூரு 6த் எலிமெண்ட் இன்ஜினியரிங் (6th Element Engineering) நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான கிரெய்க் மரியோ டி’மெல்லோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இந்தப் படகை அறிமுகம் செய்து வைத்தனர்.

 

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவர் குழுக்களை அன்புடன் வரவேற்ற இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். அக்ரானி (INS Agrani) கப்பலின் செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் குழுக்கள் சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதைக் கண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.குமரகுரு கல்வி நிறுவனங்களின் ‘யாலி 1.0’ திட்டம் முதல் இத்தகைய புதுமை முயற்சிகளுடன் தனக்குள்ள தொடர்பை நினைவுகூர்ந்த அவர், இந்த கோடையில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகும் மாணவர்களின் பொறுப்புணர்வை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.டீம் சீ சக்தி (Team Sea Sakthi) மற்றும் டீம் இன்கிராஃப்ட் (Team InCraft) ஆகிய குழுக்கள் எங்குச் சென்றாலும் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள் அதுவே உங்கள் அடையாளமாக இருக்க வேண்டும், என்றும் மாணவர்கள் ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் பிரதிநிதிகளாக இருந்தாலும் சர்வதேச அரங்கில் அவர்கள் இந்தியாவின் தூதர்களாகவே அறியப்படுவார்கள் என்றும் கூறியதுடன், தேசபக்தி மற்றும் முதலில் தேசம் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.மேலும் பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன், செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இன்றைய தலைமுறையை வரையறுக்கின்றன எனவும் இந்தியாவின் சுயசார்பு இலக்கை நோக்கி தொடர்ந்து புதுமைகளை உருவாக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி (KCT) மற்றும் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி (KCLAS) மாணவர்களால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நீர்முழ்கிக்கப்பல் மட்டும் மின்சார படகு உலகின் இரண்டு முக்கிய கடல்சார் பொறியியல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தயாராக உள்ளது.மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து வரலாறு படைத்துள்ள டீம் இன்கிராஃப்ட், இங்கிலாந்தில் ஜூன் 29 முதல் ஜூலை 10, 2026 வரை நடைபெறவுள்ள ஐரோப்பிய சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் பந்தயத்தில் (European International Submarine Races – eISR) பங்கேற்க உள்ளது.உலகின் முன்னணி பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், தண்ணீருக்கு அடியில் , மோட்டார் இல்லாத நீர்மூழ்கிக் கப்பலை மனித சக்தியால் இயக்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் சவாலான பாதையை வெற்றிகரமாகக் கடக்க வேண்டும்.இந்தியாவில் இருந்து இந்தப் போட்டிக்குத் தேர்வான ஒரே கல்வி நிறுவனம் குமரகுரு கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கூபா (SCUBA) சுவாசக் கருவிகளை அணிந்தபடி, ஒரு மாணவர் பைலட் தனது கால் வலிமையால் பெடலிங் செய்து இந்த கப்பலை இயக்க வேண்டும். ‘டீம் இன்கிராஃப்ட்’ உருவாக்கியுள்ள இந்த நீர்மூழ்கி கப்பலில், பறவைகளின் எலும்புக்கூடு அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘ஸ்விஃப்ட் பேர்ட் (Swift Bird) கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது தண்ணீருக்கு அடியில் அனைத்து திசைகளிலும் எளிதாகத் திரும்ப உதவுவதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இதன் வெளிப்புற உடல் பகுதி சிப்பித் தூள் (Oyster shell powder) பூச்சைக் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Continue Reading

செய்திகள்

திருநெல்வேலி ரோஸ் மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்

Published

on

திருநெல்வேலி மாவட்டம், ரோஸ் மேரி ஐடியல் பப்ளிக் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் – 2026 நிகழ்ச்சி “Inspired by Nature. For Climate. For Our Future.” என்ற தலைப்பில் தமிழன் சிறகுகள் – இந்திய அரசு (MY Bharath கேந்த்ரா) சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அலுவலர் திரு. எல். ஞானச்சந்திரன், அரும்புகள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ஆர். மதிவாணன் மற்றும் மத்திய மக்கள் தொடர்பக தொழில்நுட்ப உதவியாளர் திரு. பி. வேல்முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக உடன் தமிழன் சிறகுகள் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

மேலும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்படுத்தப்பட்டதுடன், 210 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Continue Reading

கோயம்பத்தூர்

தலைவா தரணி ஆள வா

Published

on

அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு..

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலக உள்ளதாகவும், அவரது பிறந்த நாளான ஜூன் 4-ஆம் தேதி புதிய அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சமூக வலைதளங்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், இதுகுறித்து அண்ணாமலை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அண்ணாமலைக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். கோவையிலும் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி சார்பில் “தலைவா தரணி ஆள வா” என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அண்ணாமலையின் புகைப்படங்களுடன் “தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட…” என்ற வாசகத்துடன் புதிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை மாநகரின் உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த போஸ்டர்கள் காணப்படுவதால் அரசியல் மற்றும் ரசிகர் மன்ற வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த போஸ்டர்கள் தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Continue Reading

Trending