Connect with us

ஆரோக்கியம்

வாழ்க்கையை ஈசியா வாழுங்க! – – சதீஷ்குமார் சந்திரசேகரன்

Published

on

பெரும்பாலும் அனைவருடைய வாழ்க்கையில் நன்மை, தீமை இவை இரண்டும் இல்லாமல் வாழ்கை அமையாது எல்லோரும் சோதனைகளைத் தாண்டித்தான் அன்றாட வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். ஏழை, பணக்காரன் என்ற யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரவர் விரலுக்கு ஏற்றவாறு வீக்கம் இருக்கத் தான் செய்கிறது. இதை சுலபமாக கையாளத் தெரிந்தவர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்.

என்று ஆங்கிலத்தில் அழகான வார்த்தைகள் மூலம் கூறியிருக்கிறார்கள். அதாவது,” நீங்கள் தேடும் மகிழ்ச்சி உங்களைச் சுற்றி இருக்கிறது, அதை கவனிக்க மறக்காதீர்கள்”. என்பது பொருள்.

நாய்,பூனை, ஆடு,மாடு மற்ற மிருகங்கள் தங்களது வாழ்க்கையை அன்றைய தினத்தை அனுபவித்து வாழ்கின்றன. அன்று கிடைக்கும் உணவையும், அன்பையும் அனுபவித்து மகிழ்கின்றனர். பிற உயிரினங்களுக்கும் துன்பம் வரத்தான் செய்கிறது அதை கடந்து தான் தங்களது வாழ்க்கையை நகர்த்தி செல்கிறது. ஆனால் மனித இனம் மட்டும், தமக்கு நல்லதே நடக்க வேண்டும் என எண்ணி அன்றாடம் கிடைக்கும் மகிழ்ச்சியைத் தொலைத்து விடுகின்றான். போதிய உடற்பயிற்சி உணவுக் கட்டுப்பாடு இருந்தும் சில நோய்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது. சிறப்பாக திட்டமிட்டு ஒரு தொழிலைத் துவங்கினாலும் நஷ்டம் வருவதை தடுப்பது சாத்தியமில்லா ஒன்று. எல்லோருக்கும் நன்மை மட்டுமே நினைக்கிறேன் ஆனால் எனக்கு தீமைகள் வருகின்றது என்று நினைத்து மனதை காயமாக்கிக் கொள்வதில் என்ன பயன்.

The happiness you’re looking for is all around you,
don’t forget to notice it.

இயற்கை எப்பொழுதும் ஒரே மாதிரி நமக்கு கிடைப்பதில்லை, மழை, வெயில், பனி, புயல், பூகம்பம் என மாறுபட்ட இயற்கையை தான் நாம் அனுபவித்து வருகிறோம். மனிதருக்கு மட்டும் ஒரே மாதிரியான தன்மை இருக்க வேண்டும் என நினைப்பது எந்த வகையில் நியாயம்?. வருவது வரட்டும் கிடைப்பது கிடைக்கட்டும் அனைத்தும் நன்மைக்கே! என புரிந்து நமக்குக் கிடைத்திருக்கும் இந்த கோல்டன் வாழ்க்கையை பிறருக்கு கெடுதல் நினைக்காமல், சந்தோஷமாக வாழ பழகினால், வாழ்க்கை ஈசியானதாக இருக்கும்.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஆரோக்கியம்

மாறும் வாழ்க்கை முறை;குழந்தை பிறப்பு விகித சரிவு: 6 ஆண்டுகளில் 18% வீழ்ச்சி!

Published

on

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 18 சதவீதம் குறைந்துள்ளது என்பது சாதாரண புள்ளிவிவரம் அல்ல; அது சமூகத்தின் திசையை சுட்டிக்காட்டும் முக்கிய எச்சரிக்கை. கல்வி, நகர்மயமாக்கல், பெண்களின் வேலைவாய்ப்பு முன்னேற்றம் ஆகியவை இந்த மாற்றத்தின் வெளிப்படையான காரணங்களாக இருந்தாலும், அதன் நீண்டகால விளைவுகளை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.ஒருபுறம், பெண்கள் கல்வியிலும் தொழிலிலும் முன்னேறுவது சமூக முன்னேற்றத்தின் அடையாளம். மறுபுறம், திருமண வயது உயர்வு, குழந்தை பெறும் காலம் தாமதம், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவை தம்பதிகளை குறைந்த குழந்தை எண்ணிக்கைக்குத் தள்ளுகின்றன. வீடு, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளின் செலவுகள் தொடர்ந்து உயர்வது, இளம் குடும்பங்களுக்கு குழந்தை வளர்ப்பு ஒரு சுமையாகவே தோன்றும் நிலையை உருவாக்கியுள்ளது.

நகர்ப்புறங்களில் இந்த சரிவு அதிகமாகக் காணப்படுவது கவனிக்கத்தக்கது. வேலை அழுத்தம், நேர பற்றாக்குறை, பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் ஆகியவை இளம் தம்பதிகளின் முடிவுகளை நேரடியாக பாதிக்கின்றன. இதன் விளைவாக, தமிழகத்தின் மக்கள் தொகை அமைப்பு மெல்ல மெல்ல முதியோர் சார்ந்த சமூகமாக மாறும் அபாயம் உருவாகி வருகிறது.

குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்தால், எதிர்காலத்தில் வேலைக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவது, பொருளாதார வளர்ச்சியில் மந்தம், சமூக பாதுகாப்புத் திட்டங்களில் கூடுதல் சுமை போன்ற சவால்கள் தவிர்க்க முடியாதவையாக மாறும். இதை அரசு, சமூக அமைப்புகள் மற்றும் கொள்கை நிர்ணயாளர்கள் அலட்சியப்படுத்த முடியாது.

பெண்களின் உரிமை, கல்வி மற்றும் சுயாதீனத்தை பாதிக்காமல், வேலை-வாழ்க்கை சமநிலை, குழந்தை பராமரிப்பு வசதிகள், குடும்ப நல ஆதரவு திட்டங்கள் போன்றவற்றை வலுப்படுத்துவது இன்றைய அவசியம். மக்கள் தொகை வளர்ச்சி குறித்த விவாதம் கட்டுப்பாட்டை விட, சமநிலையை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.தமிழகத்தின் சமூக மற்றும் பொருளாதார எதிர்காலத்தை தவிர்க்க முடியாத வகையில் பாதிக்கக்கூடிய இந்த குழந்தை பிறப்பு விகித சரிவு, இன்றே சீரிய சிந்தனையும் தூரநோக்கு கொள்கைகளையும் கோருகிறது. இது எச்சரிக்கை மட்டுமல்ல; நடவடிக்கைக்கான அழைப்பாகவும் பார்க்கப்பட வேண்டும்.

Continue Reading

ஆரோக்கியம்

கோவை ஜெம் புற்றுநோய் மையம் சார்பில் இந்தியாவில் முதன்முறையாக கருப்பை புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து சாதனை

Published

on

பெரிட்டோனியல் கார்சினோமாட்டோசிஸ் (Peritoneal Carcinomatosis – PC) என்பது குடல், வயிறு மற்றும் கருப்பை (Ovarian) போன்ற மேம்பட்ட நிலை வயிற்றுப் பகுதி புற்றுநோய்களில் காணப்படும் ஒரு கடுமையான நிலையாகும். இந்த நிலையில் நோயாளிகள் கடுமையான அறிகுறிகளையும் குறைந்த ஆயுள் எதிர்பார்ப்பையும் எதிர்கொள்கிறார்கள்.

முன்னதாக, இதற்கான முக்கிய சிகிச்சையாக கீமோதெரபி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால், வயிற்றுக்குள் உள்ள பெரிட்டோனியல் புற்றுநோய்களுக்கு இரத்த ஓட்டம் குறைவாக இருப்பதால், கீமோதெரபி முழுமையான பலனை அளிக்காது. இந்த சூழலில், சைட்டோரெடக்டிவ் சர்ஜரி (CRS) மற்றும் ஹைபர்தெர்மிக் இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபி (HIPEC) ஆகிய இணைந்த சிகிச்சை முறைகள், நோயாளிகளின் அறிகுறிகளை குறைத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சிலருக்கு முழுமையான குணமடையும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளன.

ஆய்வுகளின் படி, அறிகுறி நிவாரணம் 26.5% முதல் 100% வரை காணப்பட்டதுடன், 90% வரை நீடித்த கட்டுப்பாடும் பதிவாகியுள்ளது. முன்னர் மேற்கொள்ளப்பட்ட டிபல்கிங் (Debulking) அறுவை சிகிச்சைகள் நோயாளிகளின் வாழ்நாளை உயர்த்தினாலும், புற்றுநோய் மீள்பிறப்பு மற்றும் கடுமையான அறிகுறிகள் அதிகமாக இருந்தன. இதைத் தவிர்க்க, பெரிட்டோனெக்டமி (Peritonectomy) — அதாவது வயிற்றுக்குள் உள்ள பெரிட்டோனியத்தை முழுமையாக அகற்றும் அறுவை சிகிச்சை — முதன்மை கட்டியுடன் சேர்த்து செய்யப்படுவதால் சிறந்த பலன் கிடைக்கிறது. பாரம்பரிய முறையில் இந்த CRS அறுவை சிகிச்சை பெரிய வெட்டுகளுடன் நீண்ட நேரம் செய்யப்படுவதால், அதிக ரத்த இழப்பு, அதிக சிக்கல்கள் மற்றும் நீண்ட மீட்பு காலம் ஏற்பட்டது. இதன் மூலம் 5 ஆண்டு உயிர்வாழ்வு விகிதம் சுமார் 31% வரை மட்டுமே இருந்தது.

நவீன லேபரஸ்கோபிக் (Keyhole) அறுவை சிகிச்சை இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தால், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை லேபரஸ்கோபிக் (கீஹோல்) முறையில் செய்ய முடிகிறது. சிறிய துளைகள் வழியாக, உயர் தெளிவு கொண்ட பெரிதாக்கப்பட்ட காட்சியுடன், வயிற்றுக்குள் உள்ள முழு பெரிட்டோனியத்தையும் மிகத் துல்லியமாக அகற்ற முடிகிறது. மேலும், ICG (Indocyanine Green) ஃப்ளூரசென்ஸ் தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய் திசுக்கள் ஒளிர்வதனால், லேபரஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகளில் அவற்றை மிகத் துல்லியமாக கண்டறிந்து அகற்ற முடிகிறது.

இந்த நவீன முறையின் பலன்கள்:

குறைந்த வலி, குறைந்த ரத்த இழப்பு,குறைந்த நாட்கள் மருத்துவமனையில் தங்குதல், விரைவான மீட்பு, ரத்த மாற்றம் குறைவதால் நோய் மீள்பிறப்பு அபாயம் குறைவு, நோயாளியின் எதிர்ப்பு சக்தி (Immune system) பாதிக்கப்படாமல் பாதுகாப்பு, சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் மேலான சிகிச்சை முடிவுகள்

ஜெம் புற்றுநோய் மையத்தின் சாதனை :

கோயம்புத்தூர் GEM Cancer Centre, GEM Hospital மேம்பட்ட வயிற்றுப் பகுதி புற்றுநோய்களுக்கு CRS–HIPEC முறையில் வெற்றிகரமான சிகிச்சை அளித்து ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக, மேம்பட்ட கருப்பை புற்றுநோய்க்கு லேபரஸ்கோபிக் முறையில் முழுமையான பாரியேட்டல் பெரிட்டோனெக்டமி அறுவை சிகிச்சையை GEM மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இதுவரை, ஐந்து நோயாளிகளில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த நோயாளிகள் அனைவரும் அறுவை சிகிச்சைக்கு முன் நியோஅட்ஜுவன்ட் கீமோதெரபி (Neoadjuvant Chemotherapy) பெற்ற பின்னர், இந்த நவீன அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேம்பட்ட கருப்பை புற்றுநோய் சிகிச்சையில் இந்தியாவில் முதன்முறையாகலேபரஸ்கோபிக் முழுமையான பெரிட்டோனெக்டமி – GEM புற்றுநோய் நிறுவனம், கோயம்புத்தூர் :

கோயம்புத்தூரில் அமைந்துள்ள GEM Cancer Institute, மேம்பட்ட கருப்பை (Ovarian) புற்றுநோய் மற்றும் வயிற்றுப் பகுதி புற்றுநோய்களின் சிகிச்சையில் ஒரு முக்கியமான மருத்துவ மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக, மேம்பட்ட கருப்பை புற்றுநோய்க்கு லேபரஸ்கோபிக் முறையில் முழுமையான பாரியேட்டல் பெரிட்டோனெக்டமி (Complete Parietal Peritonectomy) அறுவை சிகிச்சையை GEM மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

சிகிச்சை முறை :

நோயாளிகளுக்கு முதலில் உடல் முழுவதும் பரவும் நோயை கட்டுப்படுத்த நியோஅட்ஜுவன்ட் கீமோதெரபி வழங்கப்பட்டது. அதன் பின்னர்,

• லேபரஸ்கோபிக் சைட்டோரெடக்டிவ் சர்ஜரி
• ராடிக்கல் ஹிஸ்டெரெக்டமி (கருப்பை முழுமையாக அகற்றுதல்)
• கருப்பை முட்டைகள் (Ovaries) அகற்றுதல்
• வயிற்றுக்குள் உள்ள முழு பெரிட்டோனியல் அடுக்கையும் அகற்றும் முழுமையான பெரிட்டோனெக்டமி ஆகிய சிக்கலான அறுவை சிகிச்சைகள் கீஹோல் (Keyhole) முறையில் மேற்கொள்ளப்பட்டன.
• இவற்றில் இரண்டு நோயாளிகளுக்கு, முழுமையான பெரிட்டோனெக்டமிக்குப் பின்னர், லேபரஸ்கோபிக் HIPEC (Hyperthermic Intraperitoneal Chemotherapy) — அதாவது வயிற்றுக்குள் நேரடியாக சூடான கீமோதெரபி — கூடுதலாக வழங்கப்பட்டது.

இந்த உயர் தொழில்நுட்ப அறுவை சிகிச்சைகள்,
• டாக்டர் பழனிவேலு தலைமையில்
• மகப்பேறு புற்றுநோய் நிபுணர்கள் டாக்டர் கவிதா, டாக்டர் சாய் தர்ஷினி

ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர். பெரிட்டோனெக்டமி முடிந்த பிறகு, HIPEC இன்ட்ராபெரிட்டோனியல் கீமோதெரபியை டாக்டர் பரத் ரங்கராஜன் வெற்றிகரமாக மேற்கொண்டார்.

பிற வயிற்றுப் பகுதி புற்றுநோய்களுக்கு சிகிச்சை :

குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களால் ஏற்படும் பெரிட்டோனியல் கார்சினோமாட்டோசிஸ்:

• புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்– டாக்டர் சிவகுமார், டாக்டர் அருள் முருகன்
• ஈசோஃபேகோ–காஸ்ட்ரிக் புற்றுநோய்கள் – டாக்டர் ஆர். பார்த்தசாரதி
• கோலோரெக்டல் புற்றுநோய்கள் – டாக்டர் ராஜபாண்டியன்

ஆகிய நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) – டாக்டர் மது சாய்ராம் அவர்களால் வழங்கப்படுகிறது.

நவீன லேபரஸ்கோபிக் / ரோபோட்டிக் முறையின் பலன்கள் :

இந்த குறைந்த துளை (Minimally Invasive) லேபரஸ்கோபிக் / ரோபோட்டிக் முறையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள்:

• விரைவான மீட்பு, குறைந்த வலி மற்றும் ரத்த இழப்பு, குறைந்த நாட்கள் மருத்துவமனையில் தங்குதல், சிறந்த வாழ்க்கைத் தரம்
• ஊக்கமளிக்கும் சிகிச்சை முடிவுகள் ஆகிய பலன்களைப் பெற்றுள்ளனர்.
சிறிய கீஹோல் துளைகள் மற்றும் உயர் தெளிவு பெரிதாக்கப்பட்ட காட்சியுடன், வயிற்றுக்குள் உள்ள புற்றுநோய் திசுக்களை மிகத் துல்லியமாக அகற்ற முடிகிறது. இதனால் நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படுவதோடு, நோயாளியின் எதிர்ப்பு சக்தியும் பாதுகாக்கப்படுகிறது.

பெண்களுக்கு புதிய நம்பிக்கை :

மேம்பட்ட கருப்பை புற்றுநோய் பொதுவாக குறைந்த உயிர்வாழ்வு விகிதம் கொண்டிருந்தாலும், முன்னதாக கண்டறிதல், சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை, நவீன கீமோதெரபி மற்றும் இலக்கு சிகிச்சைகள் மூலம் சிகிச்சை முடிவுகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளில் 5 ஆண்டு உயிர்வாழ்வு விகிதம் 90%க்கும் மேல் காணப்படுகிறது.

ஜெம் – முன்னோடி புற்றுநோய் சிகிச்சை மையம் :

ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் மையமாக விளங்கும் GEM Cancer Institute, Coimbatore, இந்த மேம்பட்ட சிகிச்சை முறைகளில் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது. இதுவரை, ஐந்து நோயாளிகளில் லேபரஸ்கோபிக் முழுமையான பெரிட்டோனெக்டமி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

ஜெம் மருத்துவமனையில், மருத்துவ புற்றுநோய் நிபுணர்கள், அறுவை சிகிச்சை புற்றுநோய் நிபுணர்கள், குடலியல் அறுவை நிபுணர்கள் மற்றும் மகப்பேறு புற்றுநோய் நிபுணர்கள் இணைந்து ஒருங்கிணைந்த குழு முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நவீன சிகிச்சை, மேம்பட்ட கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவான மீட்பு, சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.ஆரம்ப விழிப்புணர்வு மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுதல், சிகிச்சை வெற்றியை பலமடங்கு உயர்த்தும்.

Continue Reading

ஆரோக்கியம்

குழந்தைகளை பாதிக்கும் டைப்–1 நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு மாரத்தான்

Published

on

குழந்தைகளை பாதிக்கும் டைப்–1 நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ரோட்டரி இ–கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து, 3-வது ஆண்டு ‘கிட்-அ-தான்’ (Kid-A-Thon) என்ற மாரத்தான் நிகழ்வை சிறப்பாக நடத்தின. இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் – தாமஸ் பார்க் பகுதியில் நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில், டைப்–1 நீரிழிவு நோயுடன் போராடும் சில குழந்தைகள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உற்சாகமாக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நடைப்பயணத்தை கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் திரு. சரவண சுந்தர், ஐ.பி.எஸ், ராசி சீட்ஸ் நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன்,இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்,காம்பாட் டயாபடீஸ் திட்ட இயக்குநரும் கிட்-அ-தான் தலைவருமான ரோட்டேரியன் ரேஷ்மா ரமேஷ், ரோட்டரி இ–கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ் தலைவர் ரோட்டேரியன் மகேஷ் பிரபு, செயலாளர் ரோட்டேரியன் சுஜய் ஷ்ரோஃப்,
ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நடைப்பயணத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சூர்வஜித் எஸ். கிருஷ்ணன்,
இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதி முழுவதும் இதயங்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள டைப்–1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.மேலும், இன்சுலின் பம்புகள், மருந்துகள், ஊசிகள் உள்ளிட்ட அவசியமான மருத்துவ உதவிகளை ரோட்டரி இ–கிளப் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து வழங்கி வருவதாக கூறினார். டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் பேசுகையில்,டைப்–1 நீரிழிவு நோய் என்பது தன்னைத்தானே தாக்கும் (Autoimmune) நோய் ஆகும் என்றும், இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிப்பதாகவும் கூறினார்.உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் இன்சுலின் சுரக்கும் செல்களை தாக்கும்போது இந்த நோய் உருவாகிறது.
குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடிப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக இரத்தச் சர்க்கரை பரிசோதனை செய்து மருத்துவரை அணுக வேண்டும் என பெற்றோருக்கு அவர் அறிவுறுத்தினார்.மேலும், டைப்–1 நீரிழிவு நோயுடன் போராடும் குழந்தைகள் இன்சுலின் தவறாமல் எடுத்துக் கொண்டால் சாதாரண வாழ்க்கை நடத்த முடியும்.
இன்சுலின் தவிர்த்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

 இந்த பிரம்மாண்ட நிகழ்வை ரோட்டேரியன் ரேஷ்மா ரமேஷ், ரோட்டேரியன் மகேஷ் பிரபு மற்றும் ரோட்டேரியன் சுஜய் ஷ்ரோஃப் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும்
பதக்கங்கள்,உணவுப் பொருட்களுடன் கூடிய பரிசுப் பைகள், மோர் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.

Continue Reading

Trending