உள்ளூர் செய்திகள்

தமிழின் பெருமையை அறிய கோவையில் கூடும் வடமாநில மாணவர்கள்

Published

on

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வித்யா பாரதி உச்ச கல்வி சன்ஸ்தான் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் “லெர்ன் பாரதிய பாஷா இன்டர்ன்ஷிப் திட்டம் 2.0” தொடங்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் இரண்டு பேராசிரியர்கள், தமிழ்மொழி, அதன் தொன்மை, பண்பாடு, இலக்கியம் மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட 10 நாள் பயிற்சி முகாமான “லேர்ன் பாரதிய பாஷா இன்டர்ன்ஷிப் திட்டம் 2.0” (Learn Bharatiya Bhasha Internship Programme 2.0) இரண்டாம் பதிப்பில் பங்கேற்பதற்காக கோவை குனியமுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (SKASC) வந்தடைந்துள்ளனர்.இந்தப் பயிற்சி திட்டத்தை கல்லூரி நிர்வாகம், வித்யா பாரதி உச்ச கல்வி நிறுவனம் மற்றும் மத்திய செம்மொழித் தமிழ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICSSR) முன்னாள் தலைவர் பேராசிரியர் பி. கனகசபாபதி கலந்து கொண்டு பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

“மொழி என்பது சமூகங்களுக்கிடையே கருத்துகள், மதிப்புகள் மற்றும் பாரம்பரியங்களைப் பரிமாறிக் கொள்ள உதவும் ஒரு பாலமாக விளங்குகிறது. உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ், இந்தியப் பண்பாட்டின் மகத்துவத்தைப் பிரதிபலிக்கும் செழுமையான இலக்கிய மரபைக் கொண்டுள்ளது.

சங்க காலம் முதல் நவீன காலம் வரை தமிழ் இலக்கியம், நாட்டின் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பல மொழிகளைக் கற்றுக்கொள்வது சிக்கல்களைத் தீர்க்கும் திறன், சூழலுக்கு ஏற்ப தழுவிக் கொள்ளும் திறன் மற்றும் பண்பாட்டு புரிதலை மேம்படுத்துகிறது. பன்மொழித் திறன், மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் தங்களது தாய்மொழியைத் தாண்டி மற்ற இந்திய மொழிகளிலும் தேர்ச்சி பெற ஊக்குவிக்கிறது” என்றார்.

வித்யா பாரதி உச்ச கல்வி நிறுவனத்தின் தேசிய அமைப்புச் செயலாளரும் சிறப்பு விருந்தினருமான கே.என். ரகுநந்தன், இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மை மற்றும் அதன் செழுமையான பாரம்பரியத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து கவுன்சிலின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. சுந்தரமூர்த்தி விளக்கமளித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி விழாவிற்கு தலைமை தாங்கி, மாணவர்கள் ஆர்வத்துடன் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உலகளவில் தமிழ்ப் பாரம்பரியம் தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பதோடு, இத்தகைய திட்டங்கள் மாணவர்களிடையே மொழி ஒற்றுமையையும் பண்பாட்டு புரிதலையும் மேம்படுத்துகின்றன என்று அவர் தெரிவித்தார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர். ஜெகஜீவன் வரவேற்புரை ஆற்றி, “மாணவர்கள் தமிழை ஒரு மொழியாக மட்டுமல்லாமல், இந்திய நாகரிகத்தின் அடையாளமாகவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கே. சுந்தரராமன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஆர். விஜயசமுந்தேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.

Click to comment

Trending

Exit mobile version