கோயம்பத்தூர்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

Published

on

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா 17.06.2026 (புதன்கிழமை) இன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந் தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கல்லூரியின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு வரவேற்புரை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் ஈபிஜி ஃபவுண்டேஷனின் தலைவருமான முனைவர் ஈ.பாலகுருசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார். பின்னர், கல்லூரி கையேட்டினை சிறப்பு விருந்தினர் வெளியிட எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது,

40 ஆண்டுகால கல்வி சேவை என்பது ஒரு எளிமையான காரியம் அல்ல. தரமான கல்விச்சூழல், அர்ப்பணிப்போடு இயங்கக்கூடிய பேராசிரியர்கள் போன்ற காரணிகள் தான் மிக முக்கியக் காரணம். இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் இக்கல்லூரி 100 இடங்களுக்குள் இருப்பது பாராட்டுக்குரியது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் மிக மிக முக்கியமானவர்கள். இளைஞர்களால் தான் இந்தியா வளர்ந்த நாடாக மாற உள்ளது. நம் வாழ்க்கையில் அறிந்துகொள்ளும் ஆர்வம், அர்ப்பணிப்பு, நல்ல குணம், படைப்பாற்றல், பங்களிப்பு ஆகிய 5 பண்புகளை கடைபிடித்தால் நாம் எப்போதும் வெற்றியாளர்களாகத் திகழ முடியும். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தரமான சமுதாயத்தை உருவாக்க உழைக்க வேண்டும். சுயநலமான வாழ்க்கையைக் கடந்து பொது நலத்தோடு நாம் கற்ற கல்வியை இந்த சமூகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். இன்றைய நவீன உலகில் ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், திருநெல்வேலி சையத் குழுமங்களின் இயக்குநருமான முனைவர் என். சையத் நவாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தன் கல்லூரி கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார்.

தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. நிறைவாக கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஜி.மரிய பிரிசில்லா நன்றி கூறினார். விழாவில் 2, 250 மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Click to comment

Trending

Exit mobile version