Connect with us

செய்திகள்

கோவைக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெளியிட்டார் அண்ணாமலை !

Published

on

கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை தனது தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டார். முழு விவரம் !

கோவையில் 4 நவோதயா பள்ளிகள் அமைத்து குழந்தைகளுக்கு உலகம் தரம் வாய்ந்த கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

கோவை பகுதியின் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு சிறப்பான பயிற்சிகள் கிடைப்பதை உறுதி செய்ய ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு பயிற்சி மையங்களில் ஒன்றான தேசிய விளையாட்டு ஆணையம் – பட்டியாலாவின் கிளை பயிற்சி மையம் கோவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயமுத்தூர் பாராளுமன்ற தொகுதிக்குள் அடுத்த 500 நாட்களுக்குள் (1.5 ஆண்டுகள்) 250 மோடி மக்கள் மருந்தகமருந்தகங்கள் நிறுவப்படும்.

வயோதிகர்களுக்கு உடல்ரீதியான மற்றும் உளவியல் ரீதியான சிறப்பு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய கோவையில் உலகத்தரம் வாய்ந்த தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தை கோவையில் அமைப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள புராதரமான ஆன்மீக தலங்களுக்கு கோவையிலிருந்து 10 புதிய ரயில்கள் இயக்க முயற்சிகள் எடுக்கப்படும்.

சபரிமலை யாத்திரையை ஒருங்கிணைக்க கோயம்புத்தூரிலே உதவி மையம் அமைக்கப்படும்.

கொங்கு மண்டலத்தில் மத்திய அரசின் உதவியோடு உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை நிறுவுவோம். ஆயுஷ்மான் பாரத்திட்ட பயனாளிகளுக்கு மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3 புட் பேங்க் (food bank) காமராஜர் பெயரில் உருவாக்கப்படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு கோவை மாநகரில் எந்நேரமும் யாருக்கு வேண்டுமானாலும் உணவளிக்க முயற்சிகள் எடுக்கப்படும்.

கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும்.

சரவணம்பட்டியில், மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை கோவையின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் கண்டுகொள்ள தவறிய கோவை விமான நிலையத்தை, உலகத் தரத்திற்கு விரிவாக்கம் செய்து நவீனமயமான விமான முனையமாக மாற்றப்படும்.

இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு விமான சேவையை விரிவுபடுத்துவோம். விமான சரக்கு முனையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

திருச்சி சாலை -அவிநாசி சாலைக்கு இடையே மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து முனையம் அமைக்கப்படும்.

கோவை மக்களின் வசதிக்காக கோவைக்கென்று தனி ரயில்வே கோட்டம் அறிவிக்கப்பட்டு மூன்று புதிய ரயில் முனையங்களும் உருவாக்கப்படும், மேலும் வடகோவை மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்த ரயில் முனையங்களாக தரம் உயர்த்தப்படும். கோயம்புத்தூர் ரயில் சந்திப்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

கோயம்புத்தூர் சந்திப்பு. கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையம், பீளமேடு ரயில் நிலையம், இருகூர் ரயில் நிலையம், சிங்காநல்லூர் ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் புறநகர் ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் தேசிய அளவில் புகழ்பெற்ற ஐ.ஐ.எம். நிறுவனம் கொண்டுவர வலியுறுத்தப்படும்.

L&T பைபாஸ் சாலையின் ஒரு பகுதியான நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான பகுதி இரு வழி சாலையாக இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. குறுகலாக உள்ள இந்த 2 வழி சாலையை 8 வழி சாலையாக மாற்ற மத்திய அரசின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாய விளைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு குளிர்சாதன வசதியுடன் கூடிய விவசாய ஏற்றுமதி மையம் ஏற்படுத்தப்படும்.

சிறுதொழில்களுக்கு பலனளிக்கும் வகையில் கோவை அரசூரில் MSME தொழில்நுட்ப மையம் விரைவில் அமைக்கப்படும்.

கோவைக்கு Defense Corridor கொண்டுவந்ததை போல, Automotive Corridor அமைக்கப்பட்டு, ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்க மத்திய அரசின் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பழைய காலாவதியான வாகனங்களை நொறுக்கி அவற்றில் இருந்து பயனுள்ள பொருட்களை எடுத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் scrapped automobile breaking yard அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

20 ஆண்டுகளுக்கு முன்பு தங்க நகை தயாரிப்பில் இந்தியாவின் முதன்மை நகரமாக இருந்த கோவை தற்போது பொலிவிழந்து நிற்கிறது. இதனை மீட்டெடுக்கும் விதமாக மத்திய அரசின் உதவியுடன் கோவையில் தங்க நகை தயாரிப்பு பயிற்சி மையம் உள்ளடக்கிய ஆபரண தங்க நகை பட்டறை பூங்கா (Jewellery Park) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் இயங்கும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவுவதற்கும், மேம்படுத்துவதற்கும் மத்திய அரசின் மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

மத்திய அரசின் சுயசார்பு இந்தியா கொள்கையின் ஒரு பகுதியாக கோவை Defence Corridor-ன் முக்கிய அங்கமாக பாதுகாப்பு தளவாடங்களுக்கு தேவைப்படும் செமிகண்டக்டர் பாகங்களை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் கோவை ஸ்மார்ட் சீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியை சிறப்பு தணிக்கை செய்ய உட்படுத்துவோம். இந்த தணிக்கையில் கண்டறியப்படும் முறைகேடுகள் மீது அதற்கு காரணமானவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பாஜக பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வலியுறுத்தப்படும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

கோவையில் பிரம்மாண்ட “Agri & Poultry Expo 2026”

Published

on

கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் “அக்ரி & போல்ட்ரி எக்ஸ்போ 2026” எனும் மாபெரும் விவசாய கண்காட்சி வரும் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சி தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.

கண்காட்சியின் விழா தொடக்க நிகழ்ச்சி பிப்ரவரி 27-ஆம் தேதி காலை 12.05 மணியளவில் நடைபெறுகிறது. இதில், மாவட்ட தலைவர் திரு. G.K. நாகராஜ் – மாநில தலைவர், பி.ஜே.பி. விவசாய அணி – அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும், ஒன்றிய குழு தலைவர் திரு. K. சரவணன், ஒன்றிய குழு செயலாளர், அன்னூர் வட்டம், அ.தி.மு.க., President அன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்கம், அன்னூர், மற்றும் – கோவை, திரு. ஏர்வேந்தர் N. தண்டபாணி – மாவட்ட தலைவர் – கோவை தமிழ்நாடு விவசாய சங்கம் (பதிவு எண் : 261), திரு. G.K. விவசாய மணி (எ) G. சுப்ரமணியம் அவர்கள் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு விவசாய மற்றும் தொழில் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்த கண்காட்சியில் நவீன வேளாண் இயந்திரங்கள், கால்நடை வளர்ப்பு தொழில்நுட்பங்கள், விவசாய உபகரணங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவை ஒரே இடத்தில் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

அன்னூர் ரோட்டரி சங்கம் இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கி வருவதுடன், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை பிரைடு இவென்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதுடன், தின இதிகை ஊடகமாக இணைந்து செயல்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 9384265548, 9384177789 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Continue Reading

கோயம்பத்தூர்

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Published

on

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுடெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குப் பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் இன்று (05.02.2026) நடைபெற்றது.

எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.

அதைத்தொடர்ந்து புதுடெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை இரண்டாமாண்டு மாணவர் எஸ்.தர்ஷன், சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை இரண்டாமாண்டு மாணவி பி.ஸ்வாதி, தேசிய மாணவர் படை சார்பில் பங்கேற்ற பி.எஸ்.சி., மின்னணுவியல் மூன்றாமாண்டு மாணவி ஆர்.சந்தியா, பி.காம். சி.ஏ., இரண்டாமாண்டு மாணவர் எஸ்.ஆகாஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.

இதேபோல் புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய தால்சைனிக் முகாமில் பங்கேற்ற, பி.எஸ்சி., கணினி அறிவியல் மூன்றாமாண்டு மாணவி எம்.திவ்யா ஸ்ரீ லட்சுமி, மஹாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய மாணவர் படை இயக்குநரகங்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற பி.காம். சி.ஏ., இரண்டாமாண்டு மாணவி என்.ஜனனி ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். இவ்விழாவில் பெற்றோர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு சாதனை மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.

Continue Reading

கோயம்பத்தூர்

புற்று நோய் விழிப்புணர்வு பிரசாரத்தைத் துவங்கிய ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

Published

on

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் சரக காவல் துணை தலைவர் டாக்டர் வி. சசி மோகன், ஐ.பி.எஸ். கலந்து கொண்டு, சமூக வலைத்தளம் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு இயக்கத்தையும், இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

முதலாவதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி.குகன் வரவேற்றார். உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், புற்றுநோயின் கடுமையான தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது, ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது, சிகிச்சையை மேம்படுத்துவைத்து மற்றும் சமூகத் தடைகளை நீக்குவது போன்றவை இதன் முக்கிய நோக்கங்களாகும் எனத் தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளாக உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டின் கருப்பொருள் தனித்துவத்தால் ஒன்றிணைவோம் (United by Unique) என்பதாகும். இது மனிதநேய அடிப்படையிலான புற்றுநோய் பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், ஒவ்வொருவரின் புற்றுநோய் அனுபவமும் தனித்துவமானது என்பதை உணர்த்துகிறது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அச்சுறுத்தும் அளவில் அதிகரித்து வருகிறது. 2015-ஆம் ஆண்டில் சுமார் 10 லட்சமாக இருந்த பாதிப்பு 2025-ஆம் ஆண்டில் 16 லட்சமாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பாதிப்பின் படி, 2021-ஆம் ஆண்டில் 1,07,000 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மாவட்ட வாரியான தரவுகளில் சென்னை முதல் இடத்திலும், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் அடுத்தடுத்த இடங்களிலும், கோயம்புத்தூர் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
கோவையில் ஆண்களிடையே அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு காணப்படுகிறது.

இதில் வாய்ப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அடங்கும். பெண்களிடையே மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது.

தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு படி, இந்தியாவில் புற்றுநோய் பரிசோதனை விகிதம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை 1.9% மட்டுமே நடைபெறுகிறது; மார்பக புற்றுநோய் பரிசோதனை 0.9% ஆக உள்ளது. தமிழ்நாட்டில், கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை 4.8% மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை 9.8% ஆகும். இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் 70–80% பரிசோதனை இலக்கை விட மிகவும் குறைவாகும்.

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதை ஆரம்பகாலதிலேயே கண்டறிய உதவக்கூடிய பரிசோதனைகள் இன்று மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.

இந்த இடைவெளியை குறைக்கும் வகையில் “ஆரம்ப கட்ட கண்டறிதல் சிகிச்சைக்கு வழிவகுக்கும்” என்ற செய்தியை முன்னெடுக்கும் வகையில் மார்பக புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் இரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட 14 வகையான புற்றுநோய்களை மையமாகக் கொண்டு சமூக ஊடக விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பிப்ரவரி மாதம் முழுவதும் இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை நடத்துவதாகவும், இது தொடர்ந்து 20-ஆவது ஆண்டாக புற்றுநோய்க்கு எதிராக முன்னெடுக்கப்படும் முயற்சியாகும், என்றார்.

நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் பேசுகையில், “இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் மக்கள் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். இதனால் இது தொடர்பான விழிப்புணர்வை இந்த மாதம் முழுவதும் சமூக வலைதளங்கள் மூலமாக மேற்கொள்ள உள்ளோம். இதில் 14 வகையான புற்று நோய்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.”என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய கோயம்புத்தூர் சரக காவல் துணை தலைவர் டாக்டர் வி. சசி மோகன், இன்றைய காலகட்டத்தில் நல்ல செய்திகளை விட தேவையில்லாத மற்றும் தவறான செய்திகள் அதிகமாக பரப்பப்படுவதாக கவலை தெரிவித்தார். குறிப்பாக புற்றுநோய் குறித்த தகவல்கள் சமூகத்திலும் பள்ளிகளிலும் குணப்படுத்த முடியாத நோயாக தவறாக காட்சிப்படுத்தப்படுவதாகவும், அதிலும் ரத்தப் புற்றுநோய் தொடர்பான செய்திகள் அதிகம் பரவுவதாகவும் கூறினார்.

தற்போதைய நவீன காலகட்டத்தில் தகவல்கள் உடனடியாக மக்களிடம் சென்று சேர சமூக வலைதளங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் அந்த தகவல்கள் உண்மையானதும் நம்பகத்தன்மை கொண்டதும் ஆக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சமூகத்தில் ஒரு நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவது, அந்த நோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதையே காட்டுகிறது என்றும், அதனை சரி செய்ய அதிக அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

புற்றுநோய் குறித்த தவறான தகவல்கள் தற்போது பரவி வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த விழிப்புணர்வு முயற்சி முக்கியமானதாக இருக்கும் என்றார். மருத்துவர்கள் மூலம் இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் போது அதற்கு அதிக நம்பகத்தன்மை உருவாகும் என்றும், புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு செல்ல இயலாத மக்களுக்கு உதவுவது சமூகத்திற்கு செய்யும் சிறந்த சேவையாக இருக்கும் என்றும் கூறினார்.

விழிப்புணர்வை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு செல்ல முடிந்தால், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதன் தாக்கத்தை குறைக்க முடியும். சரியான புரிதல் இல்லாததே நோயின் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் முழுமையாக குணப்படுத்தக் கூடியவை என்றும், சரியான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோயிலிருந்து மீண்டு வர முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த நல்ல முன்னெடுப்பு முயற்சி வெற்றியடைய ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். பார்கவி நன்றியுரை ஆற்றினார்.

இந்த முயற்சிகளின் மூலம், புற்றுநோய் விழிப்புணர்வு, ஆரம்ப கட்ட கண்டறிதல் மற்றும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் பரிசோதனை ஆகியவற்றில் தனது உறுதியான அர்ப்பணிப்பை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் திரு.எஸ்.நரேந்திரன், தலைமை செயல் அதிகாரி திரு.சி.வி.ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி திரு.டி.மகேஷ்குமார் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.எஸ்.ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.எஸ்.அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.

Continue Reading

Trending